Wednesday, August 27, 2008

ஆளுமை என்னும் முகமூடி

ஆளுமை என்றால் என்ன?
ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லாகட்டும் Personality என்ற ஆங்கிலச் சொல்லாகட்டும் இரண்டிலுமே ‘ஆள்’ - ‘person’ என்ற சொல் அடங்கி இருக்கிறது. ‘persona’ என்ற சொல்லு-க்கு முகமூடி என்று பொருள். கிரேக்க நாடகங்களில் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ற முகமூடியை அணிந்து நடிப்பார்கள். நிஜ வாழ்க்கையில் நாம் எந்த முகமூடியை அணிந்திருக்கிறோம் என்பதைக் குறிப்பதுதான் ஆளுமை என்பது.
ஆளுமை வளர்ச்சி:
ஒரு மனிதனின் ஆளுமை அவன் வாழும் சூழ்நிலைக் கூறுகளாலும் மரபு வழி காரணிகளாலும் நிலைப்படுத்தப்படுகிறது. அதாவது அவனது குடும்பம், தொழில், செய்யும் இடம், படிக்கும் அல்லது படித்த பள்ளியின் சூழ்நிலை, சமுதாயம், மற்றும் கலாச்சாரம் முதலியவை ஆளுமை வளர்வதற்கு பெரிதும் காரணமாக இருக்கின்றன.இந்த இந்த ஆளுமைத்தன்மைகள் மரபு வழியாக வருகிறது; இந்த இந்த ஆளுமைத்-தன்மைகள் சூழ்நிலைக் காரணமாக வருகிறது என்று அறுதியிட்டுக் கூற முடிவதில்லை.வளரும் நிலையில் அல்லது வளர்ந்துவிட்ட நிலையில் பொதுவாகச் சமுதாயம் எதிர்-பார்க்கும் அல்லது மிக விரும்பும் தனி மனித நடத்தைகளில் சிலவற்றை பார்ப்போம்.
ஒழுக்கம்:
ஓழுக்கம் என்பது ஏதோ அசாத்தியமான செயல்களைச் செய்வதல்ல. சாதாரண செயல்களையே சிறப்பான முறையில் செய்வது, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதால் என்ன பயன்? அது நம் உள்ளுணர்வுகளை ஒழுங்குபடுத்து-வதோடு திடீரென வரும் இன்னல்களை சமாளிக்கும் உறுதியைக் கொடுக்கும். ஒரு செயலைக் கடைசிவரை முயன்று செய்து முடிக்கும் ஆற்றலைக் கொடுக்கும். துன்பம் நம்மை அலைக்கழிக்க முடியாது.
ஒரு குறிக்கோளைத் தொடங்கும் முன், நன்கு முன் தயாரிப்பு செய்து கொள்வதும், இடை நிறுத்தம் செய்யாமல் இலக்கை அடைவதும், ஒழுக்க நடத்தையுள்ளவர்களால் மட்டுமே சாத்தியமாகிறது.ஒவ்வொரு வெற்றி முகமூடி அணிந்துள்ள-வரின் பின்னாலும் ஒழுக்கம் நிச்சயம் முக்கிய இடத்திலிருக்கும்.
உரையாடல் திறன்:
அடிக்கடி சந்திக்கின்ற நண்பர்களாக இருந்தாலும் எப்போதேனும் சந்திக்கின்ற நபராக இருந்தாலும் உற்சாகமான உரை-யாடலைத் தான் ஒவ்வொரு தனி மனிதனும் விரும்புகிறான். ஆனால் நடப்பது என்ன? பலபேர் எப்போது சந்தித்தாலும் தன்னுடைய குறைகளையும் கஷ்டங்களையுமே பேசிக் கொண்டிருப்பார்கள். அல்லது அடுத்தவன் பணமும் வசதியும் உள்ளவனாக இருக்கிறான் என்பதைப் பற்றி புழுங்கிக் கொண்டிருப்-பார்கள். எதிரில் உள்ளவர் உற்சாகமான மனநிலையில் இருந்தாலும் சற்று நேரத்தில் அவர் சேர்ந்துபோய் எதையோ பறிகொடுத்த-வர் போலாகிவிடுவார்.
எப்படி இருக்கிறீர்கள்?ஏதோ இருக்கிறேன்வியாபாம் எப்படி நடக்கிறது?ஏதோ போய்க்கிட்டிருக்குஏன் வருமானம் சரியில்லையா?ஹூம் அவனவன் நாலஞ்சு வீடு, கார் கடை கண்ணி என்றிருக்கிறான். நாம...இந்த ரீதியில் ஒரு மணி நேரம் என்ன - ஒரு நாளெல்லாம் கூட பேசுபவர்கள் இருக்-கிறார்கள்.தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக்கி நகைச்சுவை ததும்ப தன்னம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருப்பவரை தேடிப்பிடித்து நண்பராக்கிக் கொள்ளலாம்.
அக்பர், பீர்பாலை நோக்கி எரிச்சலுடன் கேட்டார். ஆரம்பத்தில் அறிவாளியாகத்தானே இருந்தீர் கள்; வரவர முட்டாளாகி விட்டீர்களே! ஏன்?அதற்கு பீர்பால், எல்லாம் உங்களுடன் பழகியதால் தான் என்றாராம் அமைதியாக.ஒருவர் கேட்டார்.உங்கள் அலுவலகத்தில் மொத்தம் எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள்?பாதி பேர்தான் என்றார் அலுவலக மேலாளர்.
தன்னை உணர்தல்:
நம்முடைய நோக்கம் அடைய விரும்பும் இலக்கு ஆகியவற்றை நிர்ணயிக்கும் முன்பு நம்மைப் பற்றிய மதிப்பீடு முக்கியம். நம்முடைய கல்வி, செல்வநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இலக்கை எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும் என்று கணிக்க வேண்டும்.எழுத்தாளராக விரும்பும் ஒருவர் முதலில் சிறுகதை, துணுக்குகள் ஆகியவற்றை எழுதிப் பழக வேண்டும். பிறகு மாதம் ஒரு கட்டுரை என்று முயற்சி செய்யலாம். பின்னர்தான் புதினம் எழுத முயற்சிக்க வேண்டும்.
ஒரு வியாபாரம் அல்லது தொழில் செய்ய முற்படும் போதுகூட அனுபவம் முதலீடு வியாபார வாய்ப்பு ஆகியவற்றை மிகக் கவனத்துடன் புரிந்து செயல்பட வேண்டும். மலைகளை பெயர்க்கும் நம்பிக்கை என்று ஒன்று இருக்குமானால் அது சுய சக்தியில் கொள்ளும் நம்பிக்கைதான் - மாரி எப்னர் - எஷன்பாக. கடுகளவு முயற்சியைச் செய்துவிட்டு மலையளவு சாதனை நிகழ்த்திவிட முடியாது.
நல்ல விஷயங்களை அடைய அதிர்ஷ்டம் வேண்டும் அதெல்லாம் நமக்கு இல்லை என்று தாழ்வு மனப்பான்மையில் வாழ்பவர் பலர். நாம் மற்றவர்களுக்கு ஈடானவர்களல்ல நம்மால் எதையும் சாதிக்க முடியாது, பலமற்ற நம்மால் எதையும் சாதிக்க முடியாது என்னும் சிந்தனைகளால் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரமும் குறைந்து செயல்திறன் குன்றிவிடும். என்ன நடந்தாலும் சரி; வெற்றி பெறுவேன் என்னும் மனப்பான்மை உள்ளவர்-களாலேயே உயர்ந்த சமூகம் உருவாகிறது.
தன்னம்பிக்கை என்பது சுயநலமுமல்ல; அகங்காரமுமல்ல, அது பேரறிவு. கற்றல் எனும் கலை: கற்றுக் கொள்வது என்பது சிறந்த அனுபவம். சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்பவர்கள் அறிவாளிகள். பிறருடைய அனுபவங்களைக் கொண்டு கற்றுக் கொள்பவர்கள் பேரறிவாளர்கள். அறிவைத் தேடுவது என்பதோடு நில்லாமல் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் அதைப் பயன்படுத்த வேண்டும். பயிற்சியே ஒருவனை முழுமைப்-படுத்துகிறது.
ஒரு விஷயத்ப் பற்றி நமக்குத் தெரியுமா? அல்லது முழுமையாகத் தெரியுமா? என்று கேட்டுப் பார்ப்போம். தெரியும் என்று சொன்னால் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று பொருள். தெரியாதவற்றை தெரியாது என்று ஒப்புக் கொள்வது மேலும் கற்றுக் கொள்ளவே என்று அணுக வேண்டும்.நம்முடைய தேவை, ஆர்வம் தாண்டி உலகில் உள்ள எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் தவறு. ஏற்கனவே நமக்குள் பதிவு செய்யப்-பட்டிருக்கிற விஷயங்களை தவறு என்று உணர்ந்து அதை அழித்துவிடுவதும் கற்றல்-தான். எனக்குத் தெரியாது என்று நினைப்பதற்கு மாறாக இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று நினைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ளத் தயாராக மனதை மாற்றி பார்வையை விரிவுபடுத்தினால் வாழ்க்கைப் பயணம் சுகமாகும்.
கவலைகளை வெல்லும் கலை:
கவலை என்றநோயை நீக்கும் மருந்து அல்லது கருவி உலகில் கண்டுபிடிக்கப்-படவில்லை.கவலை என்னும் பூதம் தொட்டில் முதல் சுடுகாடு வரை தொடர்கிறது. கவலை என்னும் அழுத்தத்தினால் மனிதன் செய்யாதது எது? கவலைக் கடலிலிருந்து மீளவிரும்பி போதை நெருப்பில் விழுந்துவிடுவது வேதனை, அதனால் அழிந்த நம்பிக்கைகளும் எதிர்ப்-பார்ப்புகளும் எத்தனை?சின்னச் சின்ன கவலைகளுக்கும் தொல்லை-களுக்கும் முக்கியத்துவம் அளித்து வாழ்க்-கையை வீணடிக்கலாமா? கவலை நோயின் முக்கிய பாதிப்பாகும்.
கவலை, மனச்சோர்வு, அதைரியம், பதற்றம் இவற்றுக்கு எதிர்ச்சொற்கள் நம்பிக்கை, துணிவு, உற்சாகம், அமைதி என்பதுதான். எதிரெதிர் சிந்தனைகள் ஒரே இடத்தில் இருக்க முடியாது. நேர்மறை நம்பிக்கைகளை விதைத்து அவநம்பிக்-கைகளை களையெடுக்கலாம்.வேலை கிடைக்காததால் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார் ஒருவர். பெரும் முயற்சி-க்குப் பிறகு ஒரு வேலை கிடைத்தது. ஆனாலும் அவர் கவலையோடு இருந்தார் ஏன்? என்று கேட்டார் நண்பர். அதற்கு அவர் வெகு நாளைக்குப் பிறகு கிடைத்த வேலை ஒரு வேளை போய்விட்டால் என்ன செய்வதென்று கவலையாக இருக்கிறது என்றார். இவர்களுக்கு விடிவே இல்லை.
ஒரு முயற்சியில் வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டால் இன்னும் மகிழ்ச்சி என்று நினைக்க வேண்டும். ஏனென்-றால் நம்முடைய முயற்சி என்ற செயல் தொடர அதுவே வாய்ப்பாகுமே!
ஆளுமை என்னும் முகமூடி என்று இக்கட்டுரையின் தலைப்பு. எதிர்மறை எண்ணங்கள் எனும் மூடியை கழற்றி எறிந்து-விட்டு, நேர்மறை எண்ணங்களால் ஆன முகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துங்கள்!

நடிகவேள் எம்.ஆர். இராதா - கவிஞர் நந்தலாலா

நடிகவேள் எம்.ஆர். இராதாவுக்கும், திருச்சிக்கும் ஏகப்பட்ட தொடர்பு உண்டு. தமிழக நாடக வரலாற்றில், ஒரு நாடகம் சற்றொப்ப 3500 முறை நடத்தப்பட்டது என்றால் அது எம்.ஆர். இராதாவின் இரத்தக் கண்ணீர் மட்டும்தான். அதுமட்டுமல்ல, அது நாடகமாக வந்து, திரைப்படமாக வந்த பிறகும், அது நாடகமாக நடிக்கப்பட்டது.
எம்.ஆர். இராதா நல்லவேளை திரைப்படங்-களில் நடித்தார். ஒருவேளை அவர் திரைப்-படங்களில் நடிக்காமல் போயிருந்தால் அவர் எப்படி நடிப்பார் என்று நமக்குத் தெரியாமல் போயிருக்கும்.
எம். ஆர். இராதா சொல்லும் போது, நான் ஒய்வு பெற்ற பிறகுதான் திரைப்படங்களுக்கு வந்தேன் என்றார்.எம்.ஆர். இராதா திரைப்படங்களை இளைஞர்கள் கூர்ந்து பார்க்க வேண்டும். சிவாஜிகணேசன் நடித்த படங்களில் இராதாவின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். தமிழ்நாட்டின் கதாநாயகன்தான் உண்மை-யான தமிழ்ச் சமூகத்தின் வில்லன். தமிழ்ச் சமூகத்தின் நல்லவன்தான் உண்மையான தமிழ்ச் சமூகத்தின் கதாநாயகன்.
நீங்கள் தமிழ்த் திரைப்படங்களை தொடர்ந்து கவனித்து இருந்தால், கன்னட நாட்டில் பிறந்த நடிகை கண்ணாம்பாள் சுத்தத் தமிழ் பேசுவார். சிவாஜி கணேசன் ஏறக்குறைய கர்ஜனை செய்வார். எஸ்.எஸ். இராஜேந்திரன் தமிழ் ஏறக்குறைய வீணை வாசிப்பது போல சுத்தமாக இருக்கும். பி.எஸ்.வீரப்பா மீட்டர் கணக்கில் சிரிப்பார். தமிழ்த் திரைப்படங்கள் முழுவதும் தூய தமிழ் பேசிய போது, தமிழ்நாட்டின் ஒரே ஒரு தமிழ் நடிகன்தான் மக்கள் தமிழ் பேசினான்; கொச்சைத் தமிழ் பேசினான். இதிலிருந்து வரலாறு என்ன பதிவு செய்திருக்கிறது என்றால், திரைப்படங்களில் தூய தமிழ் பேசியவர்களால் சமூகத்திற்குப் பயன்ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் கொச்சைத் தமிழ் பேசிய இராதாதான் தமிழரைச் சுத்தமாக்கினார் என்பது தமிழகத்தின் வரலாறு.
எம்.ஆர். இராதா முன்னிறுத்திய அற்புதமான செய்தி என்னவெனில், அவர் கலையுலகில் ஒரு கலகக்குரல். நீங்கள் நன்கு பதிவு செய்து கொள்ளுங்கள். எம்.ஆர். இராதா தமிழ்ச் சமூகத்தின் கலகக்குரல், அல்லது கலகம் செய் என்று சொன்னவர். உண்மையிலேயே ஒரு பெயரைச் சொன்னால் இந்த நாடு அதிர்ந்தது என்று சொன்னால், அது எம்.ஆர். இராதாவின் பெயர்தான்.
எம்.ஆர். இராதாவைப் போல பிம்பங்களை உடைத்தவர் நாடக உலகிலும், திரையுலகிலும் எவருமே இல்லை, வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் அவர் நடித்த காட்சியை, அவர் பாடலைக் கேட்டுப் பாருங்-கள். ஓர் ஆழ்ந்த கலகம் அவரின் நடவடிக்கை முழுவதும் இருந்தது. அதே போல அவரிடம் இருந்த துணிச்சலும் அற்புதமானவை.இன்றைக்கு இராமர் பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்தப் பாதுகாப்பும் இல்லாத ஒரு கலைஞனாக இருந்த இராதா திருச்சியில்தான் நாடகம் போட்டார் தேவர் மன்றத்தில். மன்றத்திற்கு வெளியே ஒரு சுவரொட்டியும் ஒட்டினார். அதில் உள்ளே வராதே என எழுதியிருந்தார். என் நாடகத்தைப் பார்த்து யாருக்காவது மனம் புண்பட்டால் அவர்கள் என் நாடகத்திற்கு வரவேண்டாம் எனக் கூறியிருந்தார். இது எவ்வளவு பெரிய மேதைமை தெரியுமா!
எம்.ஆர். இராதாவுக்கு இராமன் என்கிற சித்திரத்தின் பிம்பத்தைத் தூளாக்க வேண்டும். எப்படி ஆக்குவது மணிக்கணக்காகப் பேசியா? அது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதைப் பேச்சாளர் பேசிவிட்டு போயிடுவார். கலைஞனுக்கு அது தேவையில்லை. நீங்கள் இராதாவைநுட்பமாகக் கவனிக்க வேண்டும். நாடகமேடையில் இராமாயண நாடகத்தின் போது, 2 பக்கமும் இராமாயணம் தொடர்பான ஆராய்ச்சி நூல்களை அடுக்கி வைத்திருக்கிறார். இந்த நாடகத்தில் வருகிற காட்சிகள் மீது சந்தேகம் வந்தால் இந்தப் புத்தகங்களில் அதற்கு பதில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நாடகம் போடுகிறார்.
இன்றைக்கு பிம்பங்களை உடைப்பது தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. சாதாரண சிறிய நடிகர் கூட பெரிய பிம்பத்தை வைத்திருக்கிறார். ஆனால் எம்.ஆர். இராதா பிம்பங்களை உடைக்கும் அற்புதமான காரியங்களைச் செய்தார்.ஒரு சமயம் இரத்தக் கண்ணீர் நாடகத்தைத் திரைப்படமாக்க வேண்டுமென நேசனல் பிக்சர்ஸ் பெருமாள் எம்.ஆர். இராதாவிடம் வருகிறார். எம்.ஆர். இராதா 5 திரைப்படங்களில் நடித்து முடித்து-விட்டு மீண்டும் நாடகத்தில் நடிக்க வந்தவர். பொதுவாக நாடகத்தில் நடித்தவரெல்லாம் திரைப்படத்திற்குப் போனதுதான் வரலாறு. ஆனால் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து, நாடகத்திற்கு வந்த ஒரே கலைஞர் எம்.ஆர்.இராதாதான். மறந்துவிடக் கூடாது!
இரத்தக் கண்ணீரைத் திரைப்படமாக்க வேண்டும் என பெருமாள் சொன்னபோது, எம்.ஆர். இராதா 3 நிபந்தனைகளை வைக்கிறார். ஒன்று, தினமும் நாடகம் நடத்தி முடித்து, இரவு 12 மணிக்கு மேல்தான் படத்தில் நடிக்க வருவேன். இரண்டு இரத்தக் கண்ணீர் நாடகத்தின் இறுதியில் தன் மனைவியை தன் சகநண்பனுக்குத் திருமணம் முடிப்பதை கண்டிப்பாய் காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டும். மூன்றாவதாக எனக்கு ஊதியமாக 1,25,000 வேண்டும் என்றார். நாடகக் கலைஞனாக இருந்து உச்சநிலையில் இருந்தவர் அவர்.
இராமயண நாடகத்தில் இராமனாக வேடம் போட்டு முதல் காட்சியில் வெளிவருகிறார் எம்.ஆர்.இராதா. வந்ததும் என்ன செய்கிறார் தெரியுமா? ஒரு தூண் மீது கால்களை வைத்துக் கொண்டு சரக், சரக் என சொறிகிறார். பொதுவாக ரசிகர்கள் இப்படி சொறிகிறவர்-களை கதாநாயகர்களாக ஏற்க மாட்டார்கள். ஏன்னா சொறிந்து கொண்டு நிற்பதெல்லாம் சாதாரண ஒரு மனிதனின் வேலை. அப்படி ஒரு கதாநாயகனே சொறியாமல் இருக்கும் போது ஒரு கடவுள் சொறிவாரா? சொறிய முடியாத கடவுளை எல்லாம் சொறிய வைத்தவர் எம்.ஆர். இராதா. மறந்துவிடக் கூடாது! இந்தப் பிம்பங்களை உடைத்தெறிவது என்பது இராதாவின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.
அவர் சிறுவயது முதலே கலக்காரராகவே இருந்து வந்துள்ளார். டி.ஆர். மகாலிங்கத்தோடு எம்.ஆர்.இராதா சிறுவயதில் நடிக்கிறார். அப்பவெல்லாம் நாடகக் கொட்டகைகளில் பார்ப்பன சிறுவர்களுக்கு ஒரு பந்தி, மற்றவர்-களுக்கு ஒரு பந்தியும் இருந்தது. ஏன் நம்ம கூட இவங்க சாப்பிட மறுக்கிறார்கள்? என இராதா யோசனை செய்கிறார். ஒருமுறை டி.ஆர். மகாலிங்கத்திற்குக் கொடுத்த காபியை எடுத்து பாதி குடித்துவிட்டு, பாதி வைத்து விடுகிறார். அந்தக் காபியை டி.ஆர். மகாலிங்கம் குடித்து-விட்டு உயிரோடு இருப்பதை இராதா பார்க்கிறார். நாம் சாப்பிட்டதை இவர் சாப்பிட்டார் ஒன்றும் ஆகவில்லையே, பிறகு ஏன் ஒன்றாகச் சாப்பிட மறுக்கிறார்? என அவரே பின்னாளில் எழுதினார்.
அன்றைய நாள்களில் நாடகங்கள் தொடங்கு-வதற்கு முன்னால் ஜெனரேட்டருக்கு தீபாரா-தனை காட்டி, சூடம் கொளுத்துவார்கள். அப்படித்தான் நாடகக் கொட்டகை உரிமையாளர் ஒருவர் தீபமெல்லாம் காட்டி-னார். ஆனால் ஜெனரேட்டர் ஒடவில்லை. எம்.ஆர். இராதா ஒரு கார் மெக்கானிக் மற்றும் நல்ல எலக்ட்ரீசியன். நாடகக் கொட்டகை உரிமையாளர் இராதாவிடம் வந்து, ஜெனரேட்ட-ரைச் சரி செய்து தரும்படி கேட்கிறார். -உடனே எம்.ஆர். இராதாவும், சிறிது நேரத்தில் சரி செய்துவிடுகிறார். சரி செய்து விட்டு கொட்டகை உரிமையாளரிடம் சென்று உங்க செருப்பைக் கொஞ்சம் கொடுங்கள் எனக் கேட்கிறார். எதுக்கு? என அவர் கேட்கிறார். இல்லை கொடுங்கள் எனக் கேட்டு வாங்கி இராதா, ஜெனரேட்டரை செருப்பா-லேயே அடிக்கிறார். அடித்துவிட்டு உரிமை-யாளரிடம், இப்போ ஜெனரேட்டரைப் போடுங்கள் என்கிறார். ஜெனரேட்டர் ஓடத் தொடங்கியது. எம்.ஆர். இராதா சொன்னாராம் ஜெனரேட்டர் தீபம் காண்பித்தாலும் ஓடும், செருப்பால் அடித்தாலும் ஓடும் என்றாராம்.
அதேபோல போர்வாள் எனும் நாடகத்தை எழுதிய சி.பி. சிற்றரசை சிலர் பொதுமேடையில் கிண்டல் செய்தனர். எந்த ஊருக்கு சிற்றரசு எனக் கேட்டனர். உடனே இராதாதான் இவர் நாடகத்தில் பதில் சொன்னார். இராஜ-கோபாலாச்சாரியார் என்பவரைச் சக்கரவர்த்தி என்றும் அழைப்பார்கள். அவர் எந்த ஊருக்கு சக்கரவர்த்தியோ, அதற்குப் பக்கத்து ஊருக்குத் தான் எங்காளு சிற்றரசு எனப் பதில் சொன்னார்.
எம்.ஆர். இராதா குறித்து சிவாஜி ஒருமுறை கூறினார். திரையுலகில் என் முகத்திற்கு அருகே வேறொரு நடிகரின் முகம் வருகிறது என்றால் அதைக் கண்டு அஞ்ச-மாட்டேன். அண்ணன் இராதாவின் முகம் வந்தால் நான் எச்சரிக்கையாக இருப்பேன் என்று சொன்னார்.
பத்திரிகைக்காரர் ஒருவர் இராதாவிடம் ஒரு கேள்வி கேட்டார். இவ்வளவு அற்புதமாக நடிக்கின்றீர்கள், துணிச்சலாக இருக்கின்றீர்கள், இந்நிலையில் நீங்கள் முதலமைச்சர் ஆகிவிட்-டால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்கிறார்.இராதா சொல்கிறார், இப்படிக் கேள்வி கேட்பவரையெல்லாம் தூக்கில் போட வேண்டும் என்று சொல்லிவிடுவேன் என்கிறார். என் பிழைப்பு நடிப்பு. உடனே முதலமைச்சர் ஆகிவிட முடியுமா? என்றும் கேட்டார். இன்றைக்கு நடிகர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து-விட்டார்கள்.
ஒருமுறை பெருந்தலைவர் காமராசர் எம்.ஆர்.இராதாவைப் பிரச்சார பணிக்கு அழைக்கிறார். இராதாவும் ஒப்புக் கொள்கிறார். உடனே இராதாவின் பிரச்சாரச் செலவு-களுக்காக காமராசர் ரூ.10,000 பணத்தை அவரின் வீட்டிற்கு கொடுத்துவிடுகிறார். ஆனால் இராதா பணத்தை வாங்க மறுத்து-விட்டார். அப்போது இராதா சொன்னார். பணத்தை வாங்கிக் கொண்டுதான் பேசுவதாக இருந்தால், இதைவிட அதிக பணம் வைத்-துள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு பேசியிருப்பேன் எனச் சொல்கிறார்.பிறகு சொன்னார் பெரியார் ஆதரிக்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக நானும் ஆதரிக்கிறேனே தவிர வேறொன்றுமில்லை. இதைப் பெருந்தலைவரிடம் சொல்லிவிடுங்கள் எனப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து-விடுகிறார். இதைக் காமராசரிடம் சொன்ன போது தமிழ்நாட்டில் பெரியாரைப் போன்ற தலைவர்கள் இருப்பது மிகுந்த பெருமைக்-குரியது. ஏனெனில் இராதா போன்ற தொண்டர்கள் வேறு யாருக்குக் கிடைத்-திருக்கிறார்கள் என காமராசர் சொன்னார்.
உதகையில் ஒருமுறை திரையரங்கப் படப்பிடிப்பு நடக்கிறது. வேடிக்கை பார்க்க மக்கள் திரளாகக் கூடிவிட்டனர். அப்போ ஒரே சத்தமாக இருக்கிறது. உடனே எம்.ஆர். இராதா என்ன சத்தம்? எனக் கேட்கிறார். நடிகர்களைப் பார்க்க மக்கள் கூட்டமாக வந்துள்ளனர் எனச் சொல்கிறார்கள். உடனே எம்.ஆர்.இராதா அணிந்திருந்த டிராயருடன் வெளியே வருகிறார்.எம்.ஆர்.இராதா கூட்டத்தினரிடம் கேட்-கிறார், எல்லோரும் எங்க வந்தீங்க? ஒருவர் சொன்னார், நடிகர்களைப் பார்க்கத்தான் வந்தோம் என்கிறார். எல்லோரும் என்னை மாதிரிதான் உள்ளே இருக்காங்க. இப்ப நான், அசிங்கமாக இருக்கிறேனே அதே போல்தான் எல்லோரும் இருக்காங்க. ஏய்! தெரிஞ்சுக்க மேக்கப் போட்டாதான் நல்லா இருப்பாங்க, இல்லைன்னா உங்களைவிட அசிங்கமா இருப்பாங்க எனச் சொல்லி மக்கள் கூட்டத்-தைக் கலைத்துவிட்டார். ஆக, நடிகன் என்கிற பிம்பத்தை உடைத்தார். அதே போல தலைவர்கள் என்கிற பிம்பத்தைத் தூளாக்-கினார்.
ஆனால் நல்ல விசயத்தைக் கொண்டாடியதில் இராதா மிகச் சிறந்த கலைஞன். என்.எஸ்.கே இறந்து போகிறார். இராதாவுக்குச் செய்தி வருகிறது. இவரும் போகிறார். அங்கு என்.எஸ்.கே நெற்றியில் விபூதி பூசப்பட்டுள்ளது. அதைக் கண்ட இராதா வருத்தப்படுகிறார். எவ்வளவு பகுத்தறிவு பேசிய கலைஞன்! அவருடைய நெற்றியில் திருநீறா? எனக் கவலைப்பட்ட இராதா நேராக வீட்டில் உள்ளவர்களிடம் எடுத்துச் சொல்லி விபூதியைத் துடைத்து-விட்டு, சவ ஊர்வலத்தை முன்னின்று நடத்தி-னார். அதே போல இசை மேதை இராஜரத்-தினம் இறந்த போது தன்னுடைய காரில் ஏற்றி இடுகாடு வரை சென்று சவஅடக்கம் செய்தது மட்டுமல்ல, இராஜரத்தினம் எந்த இசைக் கருவியின் மூலம் தமிழ்நாட்டில் புகழ்-பெற்றாரோ, அந்த நாதஸ்வரத்தை 43 அடியில் செய்து அவரின் சமாதியில் வைத்தவர் எம்.ஆர்.இராதா என்பதை யாரும் மறந்து-விடக்கூடாது.
ஒருமுறை செங்கல்பட்டில் அண்ணா முன்னின்று நடத்திய நடிகர்கள் மாநாட்டிற்கு பெரியார் தலைமை வகிக்கிறார். அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப் பெரிய நடிகர்கள். பி.யு.சின்னப்பா, எம்.கே. இராதா, என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்டனர். அப்போது பெரியார் பேசுகிறார். நீங்க ஒவ்வொருவரும் ரூ.50,000 சம்பளம் வாங்குகிறீர்கள். இது என்ன நியாயம்? எனப் பெரியார் கேட்கிறார். நடிகர்கள் ஏற்பாடு செய்த மாநாட்டில் தான் பெரியார் இப்படிப் பேசுகிறார்.உங்களுக்கு ரூ.50,000 சம்பளம் எனக் கேள்விப்படுகிறேன். ஆனால் விவசாயிகளுக்கு 5ரூபாய் கூட சம்பளமாகக் கொடுப்பதில்லை. நீங்கள் எல்லாம் என்ன விவசாயிகளைவிட உயர்ந்தவர்களா? எனப் பெரியார் பேசுகிறார். இதனால் நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பெரியார் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டுமென நடிகர்கள் முடிவு செய்கின்றனர். உடனே என்.எஸ்.கே மேடையில் ஏறி ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறார். அய்யா, நான் இத்தனைப் படத்தில் நடித்தேன், இவ்வளவு சம்பளம், அதில் நலிந்த நாடக நடிகர்களுக்கும் மற்றும் பலருக்கும் உதவிகள் செய்துள்ளேன் என்கிற ஒரு கணக்கைச் சொல்கிறார்.உடனே பெரியார் ஒலிபெருக்கியின் முன்வந்து, இவ்வளவும் கேட்ட பிறகு சொல்கிறேன் கிருஷ்ணன் வாழ்க, கிருஷ்ணன் மட்டும் வாழ்க என்று கூறுகிறார்.
இப்படி நடிகர்களை விமர்சித்த பெரியார் தம் வாழ்வில் ஒருவருக்கு மன்றம் அமைத்தார் என்றால் அது எம்.ஆர்.இராதாவுக்குத்தான். பெரியாரே முன்னின்று இராதா மன்றம் என்ற ஒன்றை அமைத்தார். வி.பி.சிந்தன் எதிரிகளால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் கிடந்த போது, எம்.ஆர். இராதாவும் மருத்துவ-மனையில் இருந்தார். நடிப்பை விட்டுவிட்டு என்னுடனே இருக்கின்றீர்களே என வி.பி. சிந்தன் கேட்ட போது இராதா சொன்னார். எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள். உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என அருகிலேயே இருந்தார். வாழ்வில் தாம் நேசித்த எல்லா பகுதிகளையும் அப்பழுக்கற்ற முறையில் நேசித்தவர் இராதா.
1907 இல் ஓர் ஏப்ரல் மாதம் சென்னையில் எம்டன் குண்டு வெடித்த-போதுதான் இராதா பிறந்தார். பெரியார் எறிந்த ஒரு அற்புதமான எம்டன் குண்டு எம்.ஆர். இராதா சமூகத்தின் மூடத்தனங்களை, அழுக்குகளை, ஜாதியத்தை, மேலாதிக்கங்களை எதிர்க்க பெரியாரிடம் இருந்த அற்புதமான ஆயுதம் அவர். தம் வாழ்வின் முழுதும் சமரசம் செய்து கொள்ளாத, மனதில் பட்டதை வெளிப்-படையாகச் சொன்ன இராதாவைப் போன்ற கலைஞர்கள் தமிழ்நாட்டிற்கு நிறையத் தேவைப்-படுகிறார்கள்.

நன்றி - கவிஞர் நந்தலாலா

Tuesday, August 26, 2008

பெரியார் பார்வையில் இந்தியப் பொருளாதாரம்

தந்தை பெரியார் இந்தியப் பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம் நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன் காலத்தில் எல்லாம் பொருளை உடைத்-தாயிருக்கவும், பணம் காசைக் கையாளவும் சிலருக்கே உரிமை இருந்தது. மற்றவர்களுக்குத் தானியம் தவிர, வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணம், காசு கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்ட மாற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது. ஒரு பண்டத்தைக் கொடுத்து, மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்வார்கள். கூலியாட்கள், கைத்தொழில் செய்வோர், ஏவலாள் ஆகியோருக்கும் தானியமே கொடுப்-பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் - பூமி மானியம் விடுவதே தவிர, பணமாக ஏதும் கொடுப்பதில்லை.
பெருத்த மிராசுதார்களிடம் பார்த்தாலும் தானியத்தைத்தான், பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டிப் போட்டு வைத்திருப்-பார்கள். பண்டமாற்றைத் தவிர, சாதாரண மக்கள் பணத்தைப் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும்.
ரூபாய், நாணயம் இவை நம் நாட்டு மொழியல்ல, சின்னப் பணம் அதாவது ரூ.1-க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும், எத்தனை பணம்? என்று தான் கேட்பார்கள். செல்வமுள்ளவனையும் பணக்காரன் என்றுதான் சொல்லுகின்ற வழக்கம் இன்றும் உண்டு. அரசியல் அபராதம் முதலிய-வை-களிலும் 100 பணம் 200 பணம் என்று பணக் கணக்கில் தான் கணக்குச் சொல்லு-வார்கள். சமீப காலம் வரைகூட மலை-யாளத்தில் திருவாங்கூர், கொச்சி இராச்சியத்தில் சிவில் கோர்ட்டில், ரூபாய் என்று பிராது போடுவதில்லை. 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதானாலும் அதைப் பணமாகப் பெருக்கி, அந்தப் பண எண்ணிக்கை-யைக் காட்டித்தான் பிராது போடும் வழக்கம் இருந்து வந்தது.
ஆகவே, ரூபாய் என்பதும், பவுன் என்-பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக்கூடிய நிலை ஏற்பட்டதே, பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையை-விடச் சற்று உயர்வடைந்தது என்பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே, பொதுவாகப் பார்த்தால், பொருளாதாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்ல மாட்டேன். மற்ற நாட்டைவிட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்ததல்ல. இந்தியாவை நம்பி அநேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்ட-மில்லையானால் வெள்ளைக்காரனுக்கு இங்கு வேலையில்லை. இதுபோலவே இதற்குமுன் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கு முன் வந்த ஆரியர்-களுக்கும் இந்த நாட்டில் வேலையில்லை.சாமி, பூஜை, உற்சவம், புண்ணியம், யாத்திரை ஆகியவைகளின் பெயரால் தனித் தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும், கணக்குப் பார்த்தால் மனிதனின் மொத்த வரும்படி-யில் ஒரு குறிப்பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம். மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்-கும்போதே பெரும்பான்மையோர் அவர்களது கல்வி, கலியாணம் முதலியவை-களால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கை-யைத் தொடங்க வேண்டியிருக்கிறது.
இவைகள் எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்-களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படி செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும், கடன்காரர்களாகவும் இருக்க வேண்டியதாய் இருக்கின்றது. இவை மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற்-சாலைகள், இயந்திர சாலைகள் முதலியவைகள் ஏற்பாடு செய்வதற்கும் மார்க்கமில்லாமல் பொருட்களை எல்லாம் மேற்கண்ட சடங்கு-களும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்து கொள்வதோடு கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவைகள் செய்து வைத்தல், மற்றும் உற்சவம் பூசை ஆகியவை-களுக்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துகள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்-கள் பெரும்பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன.
ஆகவே, இந்த மாதிரியாக-வெல்லாம், எல்லாப் பொருள்களும் வீணாகிக் கொண்டிருக்கையில் இந்த நாடு எந்தக் காலத்தில்தான் - எந்த வகையில் தான் பொருளா-தாரத்தில் சீர் அடைய முடியும்? நம் நாட்டுப் பொருளாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத்தையும் கவனியுங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை, மேல்நாடுகளைப் பார்த்து - நாளுக்கு நாள் செலவை அதிகரித்து வருகின்றோம்; வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ளுகின்றோம். முன்னைவிட அதிக ஆடம்பரங்களை விரும்புகின்றோம். இவை-யெல்லாம் நமக்குத் தகாதென்றோ, குற்ற-மென்றோ சொல்லவில்லை. ஆனால், மேல்-நாட்டார் எப்படிப் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தமது வாழ்வின் சுக போகத்தையும் உயர்த்திக் கொள்கிறார்களோ, அதுபோலவே நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டு, வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வருவாய்க்கு வகை செய்து கொண்டுதானே அதில் பிரவேசிக்க வேண்டும்? அதுவும் இல்லாமல், இதுவும் இல்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன்? மேல் நாட்டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து பன்மடங்கு இலாபம் அடை-கிறான். அதனால் அவர்கள் சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.ஆகவே, இவ்வளவு உயர்ந்த பொருளாதார நிலையுடைய இந்திய நாடு - இந்த நாட்டுப் பெரும்பான்மையான மக்கள் வயிறார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானத்தோடு பிழைக்கவும் முடியாதபடி வேறு பல காரியங்-கள் கொடுமைப்படுத்துகின்றன. அவைகளில் முக்கியமானவை மதமும் கடவுளும் அடுத்த ஜென்மமுமேயாகும்.
மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும், அநேகமாய் எல்லாவற்றையும் மேற்கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளு-கின்றன. அதிலும் உலகத்தில் வேறு எப்பாகத்-திலும் காண முடியாத மாதிரி இந்த நாட்டில் இம்மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே - பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு, அந்த நிலைகளைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்-பதோடு சகல போக்கியங்களையும் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டதால், இந்த உலகம் உள்ள வரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஆகிவிட்டது.
அது மாத்திரமல்லாமல், இந்த நாட்டில் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிராசுதாரனுக்கும் குடியான-வனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் இருக்கும் முறையும், மேல்ஜாதிக்காரனுக்கும் கீழ் ஜாதிக்-காரனுக்கும் இருக்கும் முறையும் பார்த்தால் இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகளவுகூட மாறி முன்னேற்றமடைய முடியவே முடியாது என்பது உறுதி.நமது பொருளாதாரக் கஷ்டமெல்லாம்- முதலாவது அனாவசியச் செலவுகளுக்கும் அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமேயாகும். 100-க்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமானவைகளுக்கும், குருட்டுப் பழக்கம், மூடநம்பிக்கையானவைகளுக்கும், சோம்பேறியாய் வாழ்கின்றவர்களின் சுக போகத்திற்கும் செலவு செய்யப்படுவதனா-லேயே வீணாகி விடுகின்றன.
இரண்டாவது, சுலபத்தில் ஒரே பக்கத்தில் பொருள்க-ளெல்லாம் போய்ச் சேரும் படியாகவும் விடுகின்றன.மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும் சக்தியும் குறைந்த வரும்படிக்கே செலவிடும்-படியான முறைகளே இங்கு வெகு காலமாக இருந்து வருகின்றன. அதாவது, புத்தியைச் செல-வழித்துக் குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்-விட்டது. இத்தியாதி காரணங்களே இந்தியா-வின் பொருளாதாரக் குறைவிற்குக் காரணமாகும்.

(களக்காட்டில், 27.12.1930-இல் சொற்பொழிவு, 'குடிஅரசு' 18.1.1931)


அறிந்து கொள்ளுங்கள்


அறிந்து கொள்ளுங்கள்
குழந்தைகளின் உரிமைகள்

1989 நவம்பர் மாதம் குழந்தைகள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையை அய்.நா. சபை அறிவித்தது.
54 சரத்துக்களை உள்ளடக்கிய இந்த உடன்படிக்கையில் கூறப்பட்டிருக்கும் குழந்தை உரிமைகள் அனைத்தும் மனித உரிமைகளாகும்.1992 டிசம்பர் மாதம் நம் நாடும், அய்.நா. உடன்படிக்கையில் கையொப்பமிட்டு நம் குழந்தைகளுக்கு உரிமைகளை வழங்கப் பொறுப்பேற்றது.குழந்தைகள் என்பவர் யார் என்பதற்கு அய்.நா. கொடுத்துள்ள விளக்கம்.
குழந்தைகள் என்பவர்கள், ஜாதி, மதம், பால், மொழி, சொத்து, நிறம், பிறப்பு, ஊனம் போன்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி 18 வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகள்தான்.குழந்தைகளின் உரிமைகளை நான்கு விதமாக பிரித்துள்ளார்கள்.
1. வாழும் உரிமைகள்
2. பாதுகாப்பு உரிமைகள்
3. வளர்ச்சி உரிமைகள்
4. பங்கேற்பு உரிமைகள்
1. வாழும் உரிமைகள்:இதில், உயிர் வாழ, பெயர் உரிமை பெற, சுகாதாரம், மருத்துவ வசதிகள் பெற, சத்தான உணவு பெற, பெற்றோருடன் சேர்ந்து வாழ, குடியுரிமை பெற போன்ற உரிமைகள் இடம் பெறுகின்றன.
2. பாதுகாப்பு உரிமைகள்:இதில், தீங்கிழைத்தல், புறக்கணித்தல், கடத்தல், பாலியல் துன்புறுத்தல், சுரண்டல், பாரபட்சம் ஆகியவைகளிலிருந்து விடுபடும் உரிமைகளே குழந்தைகளின் பாதுகாப்பு உரிமைகள் ஆகும்.
3. வளர்ச்சி உரிமைகள்:இதில், கல்வி கற்க, விளையாடுவதற்கு, தனி வளர்ச்சி, திறன் வளர்த்துக்கொள்ள, தகவல் பெற, குடும்ப வாழ்க்கை பெற, ஓய்வு எடுக்க குழந்தைகளுக்கு உரிமைகள் உண்டு.
4. பங்கேற்பு உரிமைகள்:குழந்தைகளை கலந்தாலோசிக்க, சமூக நிகழ்வுகளில் பங்குபெற, கருத்து கூற வாய்ப்பு, குழுவாகச் சயல்பட, சங்கம் அமைக்க போன்ற உரிமைகள் உண்டு.
இதன்படி அய்.நா. உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்ட நாடுகள் அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை குழந்தை உரிமைகளை நடைமுறைபடுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில் அய்.நா. குழு உறுப்பு நாடுகளின் குழந்தைகள் நலன், செயல்பாட்டை கண்காணித்து அய்.நா. பொது சபைக்கு தகவல் அளிக்கும்.
இந்த தகவல்களை முதலில் பெற்றோர்கள் அறிந்து கொண்டு, தங்களது பிஞ்சுகளுக்கு இத்தகைய உரிமைகளை அளித்திருக்கிறோமா என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நன்றி - பெரியார் பிஞ்சு

புரட்சிக்கவிஞர் சொன்ன கதை

பெரியவர் ஒருவர், சிறுவன் ஒருவனை அழைத்துக் கொண்டு வழிப் பயணம் போனார். காலில் கல் தடுக்கி சிறுவன் கீழே விழுந்து விட்டான். எழுந்த அவன், எரிச்சலுடன் கல்லை எடுத்து வீசி எறிந்தான். பெரியவர் குனிந்து கல்லை எடுத்துப் பார்த்தார்.
அய்யய்யோ! தம்பி... மோசம் போனாய். சாமியை மிதித்தாய்! இப்போது அதை வீசி எறிந்துவிட்டாய். சாமி உன் கண்களை அவித்துவிடும். அந்தச் சாமிக் கல்லை எடுத்து வா. அதோ தெரியும் அங்காளம்மன் கோவில் முன் நட்டு வைத்து கும்பிடு! கும்பிடு! என்று அதட்டினார்.
சிறுவன், கல்தானே தாத்தா! அதுக்குப் போய் கும்பிடு போட வேண்டுமா? என்று கேட்டான்.நீ கல்... கல் என்று மீண்டும் சொல்கிறாய். நன்றாக உற்றுப் பார். பூசை போட்டு, பொட்டும் வைக்கப்பட்டு இருக்கிறதே... தெரிய வில்லையா? என்றார்.
ஆமாம், தாத்தா என்று கூறி ஓடிச் சென்ற சிறுவன், அந்தக் கல்லை எடுத்து நட்டு, விழுந்து விழுந்து கும்பிட்டான். கன்னத்தில் போட்டுக் கொண்டான்.
சிறுவன் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லி பெரியவரும் சாமிக்கு கும்பிடு போட்டுவிட்டு நடந்தார். சிறுவன் பின்தெடர்ந்தான்.மதிய உணவு நேரம். சத்திரத்தில் சாப்பிட்டு விட்டுப் போய்விடலாம் என்று எண்ணி இருவரும் சென்று உண்ணத் தொடங்கினர். அப்போது, பெரியவர் வாயில் கல் ஒன்று சிக்கிற்று. தூவென்று துப்பினார்.சிறுவன், என்ன தாத்தா? என்றான்.கல் என்றார், தாத்தா.சிறுவன் ஓடிச் சென்று கை அலம்பினான். தாத்தா உமிழ்ந்த கல்லை எடுத்து ஓரமாய் வைத்துவிட்டு, அதன்முன் விழுந்து கும்பிட்டான்.ஏன்டா... மடையா.. சோற்றில் விழுந்த கல்லைக் கும்பிடுகிறாய்... அறிவு இருக்கிறதா, உனக்கு? ஆத்திரப்பட்டார் பெரியவர்.என்ன தாத்தா... தெருவில் கிடந்த கல்லை சாமி என்று சொல்லி கும்பிடச் சொன்னீர்கள்.
இந்தக் கல் சோற்றில் அல்லவா கிடந்தது. இந்தச் சாமி உயர்ந்த சாமியாயிற்றே! இதைக் கும்பிட வேண்டாமா? என்றான், சிறுவன்.தாத்தாவால் பதில் சொல்ல முடியவில்லை!


பிடல்காஸ்ட்ரோ


1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு.

1945-50 - அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார்.

1952 - நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெனரல் குல்ஜெம்சியோ பத்திஸ்தா தலைமையிலான இராணுவக் கவிழ்ப்புக்குப் பின் தேர்தல் நீக்கம் செய்யப்படுகிறது.

1953 - சூலை 26 காஸ்ட்ரோ தலைமையில் சாந்தியாகோ டி கியூபாவில் மன்காடா பாசறை மீது நடைபெற்ற தாக்குதல் தோல்வி. காஸ்ட்ரோவும் தம்பி ரவுலும் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். ஈராண்டு கழித்து பொதுமன்னிப்பின் பகுதியாக விடுதலை.

1955 - சூலை 26 இயக்கத்தை கட்டுப்பாடுமிக்க கரந்தடிப் படையாகச் சீரமைக்க வேண்டி மெக்சிகோவுக்கு இடம் பெயர்கிறார்.

1956 திசம்பர் 2 - கிரான்மா என்ற கப்பலில் காஸ்ட்ரோவும் சிறிய புரட்சிக் குழுவினரும் கியூபா செல்கின்றனர். புரட்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களில் ரவுல், எர்னெஸ்டோ சே குவேரோ உள்ளிட்ட 12 பேர் கரந்தடிப் போர் நடத்துவதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் செல்கின்றனர்.

1959 - காஸ்ட்ரோ தலைமையில் ஒன்பதாயிரம் வீரர் கொண்ட கரந்தடிப் படை அவானாவிற்குள் நுழைய, பத்திஸ்தா வேறு வழியின்றித் தப்பியோடுகிறார். காஸ்ட்ரோ தலைமை அமைச்சராகிறார்.

1960 - குருச்சேவ் தலைமையிலான சோவியத்து ஒன்றியத்தின் நெருக்கமான கூட்டாளியாகிறார். கியூபாவில் அமெரிக்க நலன்கள் அனைத்தையும் இழப்பீடின்றி நாட்டுடைமையாக்குகிறார். கியூபாவுடன் அரசநிலை உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது.

1061 - அமெரிக்க சி.ஐ.ஏ. பயிற்றுவித்த, 1,300 கியூப அகதிகள் அமெரிக்க ஆதரவுடன் பன்றிகள் விரிகுடாவில் நடத்திய படையெடுப்பு தோல்வி. காஸ்ட்ரோவுக்கு கியூப மக்கள் பேராதரவு.

1962 - கியூப ஏவுகணை நெருக்கடியால் அணுவாயுதப் போரின் விளம்பில் உலகம். துருக்கியிலிருந்து அமெரிக்க ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக கியூபாவிலிருந்து ஏவுகணைகளை அகற்ற சோவியத்து நாடு ஒப்புக் கொண்டதால் நெருக்கடி தீர்வு.

1976 - கியூபப் பொதுமைக் கட்சி புதிய சோசலிச அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கிறது. காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வு.

1976-81 அங்கோலாவிலும் எத்தியோப்பியாவிலும் சோவியத்து ஆதரவுப் படைகளுக்கு கியூபா இராணுவ ஆதரவு.

1980 - அகதி நெருக்கடி - சுமார் 1,25,000 கியூபர்கள் மேரியல் துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம்.

1991 - சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் கியூபாவில் கடுமையான நிதி முடை

1993 - கியூபா மீதான முப்பதாண்டு வணிகத் தடையை இறுக்குகிறது அமெரிக்கா. சரிந்து வரும் பொருளியலுக்கு முட்டுக் கொடுக்க காஸ்ட்ரோ அமெரிக்க டாலரை சட்டமுறைச் செல்லுபடியாக்குகிறார். வரம்புக்குட்பட்ட அளவில் தனியார் தொழில் முனைவை அனுமதிக்கிறார்.

1996 - கியூப அகதிகள் ஓட்டிச் சென்ற அமெரிக்க வானூர்திகள் இரண்டை கியூபா சுட்டு வீழ்த்தியபின் அமெரிக்க வணிகத் தடை நிரந்தரமாக்கப்படுகிறது.

2000 - ஆறு வயதான கியூப அகதி எல்லன் கோன்சாலஸ் புளோரிடாவிலிருந்து தாயகம் திரும்பச் செய்வதற்கான 7 மாத காலப் போராட்டத்தில் காஸ்ட்ரோவுக்கு வெற்றி!

2002 – ‘தீய நாடுகளின்' அச்சில் கியூபாவையும் சேர்க்கிறது அமெரிக்கா.

2006 - சூலை - அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பை ரவுலிடம் கையளிக்கிறார்.

2008 - பிப்ரவரி 19. பொதுமைக் கட்சி ஏடு கிரான்மாவில் வெளியிடப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ தமது பதவி விலகலை அறிவிக்கிறார்.

Monday, August 25, 2008

சார்லி சாப்ளின் நடித்து முதல் சினிமா


சார்லி சாப்ளின் நடித்து வெளிவந்த முதல் சினிமா மேக்கிங் ய லிவிங் (Making a Living) என்பதாகும். வாழ்க்கைக்கான வழி என்ற தலைப்பு கூட அவரைப் பொறுத்தமட்டில் சரியானதாகவே அமைந்ததது. படம் 1914 பிப்ரவரி மாதம் 2ஆம் தேதியன்று வெளிவந்தது. பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் ஒப்பந்த நடிகரான அவருக்கு வராச் சம்பளம் தந்தாக வேண்டுமே! படத் தயாரிப்பாளர் படம் எடுக்கத் தொடங்கினார். வெறுமனே உட்கார வைத்துச் சம்பளம் தர முடியாதல்லா? படப்பிடிப்புக் குழுவினருடன் நடிகரை அனுப்பிவிட்டார். தயாரிப்பாளர் உடன் செல்லவில்லை.
லாஸ் ஏஞ்சல்சுக்குப் பக்கத்தில் வெனிஸ் என்ற ஊரில் பிரபலமான மோட்டார் பந்தயம் இப்பந்தயத்தில் சில குழந்தைகளும் பங்கெடுத்துக் கொள்வதுபோல அய்ந்தே நிமிடங்கள் மட்டுமே ஓடும் படத்தை எடுக்க முடிவு. சாப்ளினுக்கு என்ன வேடம், என்ன உடை என்பது எதையுமே தெரிவிக்காமல் அனுப்பி வைத்துவிட்டார். நடிகரும் அவர் மனதுக்குத் தோன்றிய உடையை அணிந்து கொண்டு படப்பிடிப்புக்கு போனார்.
மோட்டார் பந்தயம் தொடங்கியது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் மக்கள் கூட்டம், வேடிக்கை பார்க்க! ஒரு பக்கத்தில் படத்தின் இயக்குநர் நிற்கிறார். அவரது பக்கத்தில் காமரா மேனும் காமராவும்! கார் போட்டி தொடங்கியதும் காமரா லென்சுக்கு நேரே படத்தில் தெரிகிறார் போல சாப்ளின் வந்து நிற்கிறார். அவரைத் தள்ளி விடுகிறார் இயக்குநர். அடுத்த கார் வரும் போதும் நடிகர் வந்து நிற்கிறார். இயக்குநர் அவரை எட்டி உதைக்கிறார். நடிகர் சாப்ளின் கீழே விழுந்து விட்டார். அடுத்த நொடியில் அடுத்த கார் வந்தது; ஸ்பிரிங் போல எழுந்து சாப்ளின் காமராவின் முன் மறுபடியும் வந்து நிற்கிறார். காரை மறைத்துக் கொண்டு! இப்படியாகப் பல கார்கள் ஒவ்வொன்றையும் மறைத்துக் கொண்டு சார்லி சாப்ளின் நின்றார். கடைசிக் காரும் போய்விட்டது.
கார் பந்தயத்தை படம் பிடிக்க முடியவில்லை என்று தலையைப் பிய்த்துக்கொண்டு இயக்குநர் தாம் தூம் என்று குதிக்கிறார். ஆனால் அந்த நேரத்திலும் சாப்ளின் காமரா முன் தன் முகத்தைக் கொண்டு போய் (குளோஸ் அப்) அஷ்ட கோணலாக்கிக் காட்டுகிறார். இதுதான் சினிமா என்றாகிவிட்டது. தயாரிப்பாளர் போட்டுப் பார்த்தார். வயிற்றெரிச்சல் தாங்கவில்லை. இது படமா? எனக் கோபப்பட்டார். இருந்தாலும் படத்தை வெளியிட்டார். நியூயார்க் நகரத் திரையரங்குகளில் கூட்டம் சமாளிக்க முடியவில்லை. படத்தைப் பார்த்தவர்கள் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி மீண்டும் மீண்டும் பார்த்தனர். படம் அபார வெற்றி.
இந்தப் படம் தான் சாப்ளினை வெற்றிப் படிக்கட்டுகளில் வேகமாக ஏற்றியது. வினியோகஸ்தர்களும் திரைப்படக் கொட்டகைக்காரர்களும் சாப்ளினின் அடுத்த படம் எது, எப்போது வரும் என்று கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டனர். அப்படி என்ன அந்தப் படத்தில்? சார்லி சாப்ளின் அணிந்த உடையும், அவரின் தோற்றமும் பிரமாதமான வெற்றிக்குக் காரணம்! இவராகவே உடைகள் வைத்து இருக்கும் பெட்டியைக் குடைந்து தொளதொள பான்ட், குறுகிய சிறிய கோட் என எடுத்து அணிந்துகொண்டார். தலையில் ஒரு குல்லாய் அணிந்து கொண்டார். கழுத்தில் மிக நீளமான டை! ஃபோர்டு ஸ்டெர்லிங் எனும் (உருவத்தில் பெரிய) சிரிப்பு நடிகரின் பெரிய பூட்சுகளைப் போட்டுக் கொண்டார். இவருடைய சிறிய காலிலிருந்து பூட்ஸ் கழன்று விடாமல் இருக்க, கால் மாற்றி அணிந்து கொண்டார். வலதுகாலில் இடது கால் பூட்சையும், இடது காலில் வலது கால் பூட்சையும் அணிந்து கொண்டார்.
மீசை பெரியதாகத் தெரிந்தது, அவரின் உதடுகளை மறைத்தது. கத்தரிக் கோலால் வெட்டினார். வெட்டினார். மிகவும் சிறியதாக ஆகிவிட்டது. என்ன செய்வது? அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார். கையில் ஒரு தடியைப் பிடித்துக் கொண்டார். இந்தக் கோமாளி உடைதான் அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுபோய் குபேரனாக்கியது.
சார்லி சாப்ளினின் தனித்துவம், சிறந்த கற்பனை போன்றவற்றைப் புரிந்துகொண்ட தயாரிப்பாளர் அவருக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். சார்லி சாப்ளினே கதை, திரைக்கதை, நடிப்பு இயக்கம் என எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார். தயாரிப்பாளர் அவரிடமே விட்டுவிட்டார். காட் இன் எ காபேரே (Caught in a Cabare) என்ற படம் 1914 ஏப்ரலில் வந்தது. சாப்ளின் இயக்கிய முதல் படம்! பெரும் வெற்றி. அடுத்தது பத்து நிமிடம் மட்டுமே ஓடிய காட் இன் த ரெயின் (Caught in the Rain) இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் படத்தை நினைத்து நாள் முழுவதும் சிரித்துக் கொண்டேயிருந்தார்கள்.
25 வயதில் இப்படியொரு புகழ்! ஆனால் அவருடைய தலை இதனால் கனக்கவில்லை. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத அவர், தந்தை பெரியாரைப் போலச் சிக்கனமானவர். அவருடைய சேமிப்பு வளர்ந்தது. அவர் சிறந்த மானுடப் பற்றாளர். லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஏழைகள் வாழும் பகுதிகளில் தனியாக நடந்து போவார். அப்படி ஒரு நாள் தம் நண்பரான புகழ்பெற்ற எழுத்தாளர் சமர்சொட்டாம் என்பாருடன் நடந்து போனபோது சொன்னார், ‘சமர்சொட், நாம் பார்க்கும் இதுதான் உண்மையான வாழ்க்கை, மற்றதெல்லாம் போலி’. சமர்சொட்மாம் அதிர்ந்து போனார். ஏன்? சார்லி சாப்ளின் படிப்பறிவு அற்றவர். அவரிடம் அப்படிப்பட்ட ஆற்றலா என் வியந்து போனார் சமர்சொட்மாம்!
ஏன் ஏழைகள் வாழும் பகுதிக்கு ஒரு சினிமா நடிகர் போனார்? அவரே ஒர்க் அவுசில் (Work House) வளர்ந்தவர். அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் ஏழைச் சிறார்களைப் பாதுகாக்க அரசு ஒவ்வொரு ஊரிலும் இப்படிப்பட்ட வீடுகளை வைத்திருந்தது. தெருவில் திரியும், ஆதரவற்ற சிறார்களைக் கட்டாயமாக இதில் சேர்த்து உணவு, உடை, கல்வி எல்லாமே அரசு தந்தது! இதில் சேர்க்கப்பட்ட சாப்ளின் தப்பி வெளியே ஓடிப்போய்விட்டார். எனவே, ஏழைகளின் வாழ்வு எப்படிப் போகிறது என்பதை அறிந்தவர் ஆவார்.
தன் தொடக்க கால வாழ்வை மய்யக்கருவாக வைத்து அவர் 1924இல் தயாரித்த முழுநீளப் படம் தி கிட் (The Kid). அய்ந்து வயதுப் பையனை வைத்து எடுத்த படம். ஓராண்டுக் காலமாகத் தயாரித்த படம். திருமணம் ஆகாமல் குழந்தை பெறும் தாய் அந்தக் குழந்தையை தெருவில் நின்று கொண்டிருந்த காரில் வைத்துவிட்டுப் போய்விடுகிறாள். காரைத் திருடிய திருடர்கள் குழந்தையைக் குப்பைத் தொட்டிக்கருகில் வைத்துட்டுப் போய்விடுகிறார்கள். குழந்தை சாப்ளின் கண்களில் பட்டு விடுகிறது. துண்டு சிகரெட் பொறுக்கும்போது குழந்தை இருப்பதைப் பார்த்து எடுத்துச் செல்கிறார். தானே முழுப்பட்டினி, குழந்தையை என்ன செய்வது என்று திரும்பவும் குப்பைத் தொட்டியில் விட்டுவிடலாம் என்று வருகிறார். போலிஸ்காரர் எதிரில் தென்படவே, பயந்து போய்த் தானே வளர்க்கிறார். அய்ந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
சாப்பாட்டுக்கு வழி வேண்டுமே என்று தன் வளர்ப்புக்கு ஒரு தொழில் கற்றுத் தருகிறார். கல்லால் அடித்து வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைப்பான் சிறுவன். சற்று நேரம் கழித்து சாப்ளின் வருவார். அவர் உடைந்த கண்ணாடியை சரி செய்யும் பணியாளர் வேடம்! நல்ல வேளை என நினைத்து வீட்டுக்காரர் பணியை ஒப்படைப்பார். வருமானம் வரும். சாப்பாட்டுக் கவலை தீரும்.
இந்தக் காட்சியைக் காப்பி அடிக்காத ஆளே உலகத்தில் கிடையாது. 1943இல் மங்கம்மா சபதம் என்ற படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இந்தக் காட்சியை வைத்தார். சாப்ளின் குரு, கலைவாணர் சீடர். இந்தக் கற்பனைக் காட்சி கூட வாழ்க்கையில் நிஜத்தில் நடந்தது தான். கார்னோ என்ற சாப்ளினின் நண்பர் ஜன்னல்களைப் பழுது பார்ப்பவர். தன் தொழில் ரகசியத்தை சாப்ளினுடன் பகிர்ந்து கொண்டார். சாப்ளின் படமாக்கி பகிர்ந்து கொண்டார். இந்தக் காட்சியின் பின் கதை இது தான். இப்படி சாப்ளினின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.

மாவோவின் நீண்ட பயணம்

ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்று கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றிய நேரம். சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் அசுர வளர்ச்சி அடைந்து வந்தனர். கம்யூனிஸ்டுகளை ஒடுக்கினால் தான் தான் ஆட்சி செய்ய முடியும் என்று நினைத்த ஆட்சியாளன் ஷியாங் கட்சியைத் தடை செய்தான். கம்யூனிஸ்டுகளை நாட்டை விட்டே விரட்டினான். தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் செய்த புரட்சிகள் தோல்வியடைந்தன. இதற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு மகத்தான மனிதன் அங்கே வர வேண்டியிருந்தது.




அவர் மாவோ என்றழைக்கப்பட்ட தலைவர் மாசேதுங். அவர் புரட்சியின் தோல்வியை எளிதாகக் கண்டுபிடித்தார். ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றதற்கு தொழிலாளர்கள் எழுச்சி பெரிய காரணமாக இருந்தது. ஆனால் சீனா தொழில் சார்ந்த நாடு இல்லை, விவசாயம் சார்ந்த நாடு.


சீனாவில் புரட்சி வெற்றி பெற வேண்டுமானால் விவசாயிகளிடம் எழுச்சி வரவேண்டும் என்று மாவோ உறுதியாக நம்பினார். அப்போது கொடூர ஆட்சியாளர்களிடம் சிக்கி நிலத்தில் விளைவது அனைத்தையும் விவசாயிகள் ஆட்சியாளர்களிடம் வரியாக செலுத்திக் கொண்டிருந்தனர். ஆட்சியாளர்களுக்கு எதிரான மாவோவின் கம்பீரமான குரல் விவசாயிகளை கம்யூனிஸ்டு இயக்கத்தில் எளிதாக சேர்த்தது.


ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டிய மாவோ அவர்களை வைத்தே ‘சிவப்பு ராணுவம்’ என்ற கொரில்லா அமைப்பை உருவாக்கினார். இந்த ராணுவத்தை ஒடுக்க ஷியாங் அரசு துப்பாக்கி, தோட்டா போன்ற ஆயுதங்களுடன் ஒரு லட்சம் பேர் கொண்ட ராணுவத்தை அனுப்பியது. ஷியாங்கின் ராணுவம் மாவோவின் உறுதியான சிவப்பு படையிடம் அவமானகரமான தோல்வியைத் தழுவியது.


வெறிகொண்ட ஷியாங் எட்டு லட்சம் வீரர்கள் கொண்ட ராணுவத்தை அனுப்பினான். இந்த முறை பின்வாங்குவதைத் தவிர மாவோவுக்கு வேறு வழி இருக்கவில்லை. விவசாயிகளை ஷியாங் அரசிடம் சிக்க வைக்க மனமின்றி அவர்களையும், அவர்கள் குடும்பங்களையும் அழைத்துக் கொண்டு கொரில்லாப் படை தப்பியோடியது.


இவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. காடுகள், ஆறுகள், குளிர் என ஆபத்துகளைத் தாண்டி இவர்கள் ஓடினர். இவர்களை அரசின் ராணுவம் தொடர்ந்து துரத்தி வந்து தாக்கியது. ஆறுகளின் குறுக்கே இருந்த பாலங்களைத் தகர்த்தது. விவசாயிகள், குழந்தைகள், பெண்கள் என அனைவரும் இலக்கின்றி நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டே இருந்தனர். இவர்கள் ஓடிய தூரம் சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள்.


ஒரு வருட தொடர் ஓட்டத்திற்குப் பிறகு உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்தாயிரம் மட்டுமே. இந்த கொடூர ஓட்டத்தில் மாசேதுங்கின் இரண்டு குழந்தைகளும், ஒரு சகோதரரும் பலியானார்கள். இந்த மன உறுதி மிக்க ஓட்டம் சீன மக்களை கம்யூனிஸ்டுகளாக்கியது. மாவோ சீனாவின் மகத்தான தலைவராக உருமாறினார். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் சீனாவில் ஆட்சியைக் கைப்பற்ற காரணமாக இருந்த அந்த ஓட்டத்தை ‘மாவோவின் நீண்ட பயணம்’ என வரலாறு குறிப்பிடுகிறது.

Saturday, August 23, 2008

கவிதை 2 ( பாவேந்தர் )


கந்தக கல்வெட்டுக்கள்

இறப்பும்.. பிறப்பும்...
ஒரே மாதத்தில்
ஏந்திக் கொண்ட
எங்களின் வேந்தர்
பாவேந்தர்.

மரபும்... புதுமையும்..
இவரது எழுத்தில்
உயிர்பெற்று உலாவிய
உதாரணங்கள்
ஏராளம்...

தமிழனுக்கும்...
தமிழுக்கும்...
தமிழ்
மண்ணுக்கும்...
பாவேந்தர்
சொல்லிய வரிகள்
வெந்தணல்.... செந்தணல்
வெடித்த பெருந்தணல்.

மண் விடுதலை
பெண் விடுதலை
பாவேந்தரின்
உயிர் மூச்சென
செயல் பேச்சென
ஏடு சொல்லும்
எழுத்து சொல்லும்.

அன்று மட்டுமல்ல
இன்றும்
சிலிர்க்கின்றன
பாவலரின் பாடல்கள்
தமிழ்ப்பாடங்களின்
பக்கமெல்லாம்...

விடியலைச் சொல்லும்
கந்தக
கல்வெட்டுக்கள்

Friday, August 22, 2008

கவிதை 1 (அம்பேத்கர் )

இருட்டைத் துடைக்கும் எழுஞாயிறு

அம்பேத்கர்!
நம்பிக்கையே
மூலதனமாக
திறமையே
வாழ்வான
கல்விக் கடல்,

கால்சட்டை பருவத்திலேயே
தீண்டாமை தீண்டிய
தழும்புகளோடு
வீரம் சமைத்த வீரம்,

அவரின் எழுதுகோல்
எழுதியவை
சட்டங்களை மட்டுமல்ல
உழைக்கும் மக்களின்
ாழ்க்கை திட்டங்களையும் தான்,

ஆதிக்க வெப்பத்தின்
இறுக்கிய சங்கிகளோடு
இழிவுகளைத்
துடைத்தெழுந்த
விடியல்,

பெரியாரோடு கைகோர்த்த
இவரின் கனவுகள்
மெல்ல... மெல்ல...
நனவாய் விரிகின்றன.
நம் நிலமெங்கும்.

வறுமை, வேதனை
அவமானம், படுதோல்வி
அடிமை, கொடுமை
இத்தனையையும்
எட்டி உதைத்தது
மேதையின் கல்வி

இன்றல்ல
என்றும் வாழ்வார்
வாழ்க்கைப் பக்கங்களில்
உனக்கும் எனக்குமான
இருட்டைத் துடைக்கும்
எழுஞாயிறு...